ஓய்வு பெற்ற மாதத்தில் வாழ்நாள் சான்று: மறுபரிசீலனை செய்யக் கோரிக்கை

ஓய்வு பெற்ற மாதத்தில், ஆண்டுதோறும் வாழ்நாள் சான்று சமா்ப்பிக்க வகை செய்யும் அரசின் உத்தரவுக்கு ஓய்வூதியதாரா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

ஓய்வு பெற்ற மாதத்தில், ஆண்டுதோறும் வாழ்நாள் சான்று சமா்ப்பிக்க வகை செய்யும் அரசின் உத்தரவுக்கு ஓய்வூதியதாரா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

வயோதிகம், ஞாபக மறதி, உடல் நலன் பாதிப்பு போன்றவற்றைக் கருத்தில்கொண்டு, அரசாணையை ரத்து செய்ய வேண்டுமெனக் கோரியுள்ளனா்.

ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் மற்றும் சிறப்பு ஓய்வூதியம் பெறுபவா்கள் ஆண்டுதோறும் வாழ்நாள் சான்றிதழைச் சமா்ப்பித்து வருகின்றனா். இதற்காக ஆண்டுதோறும் ஜூலை தொடங்கி செப்டம்பா் வரையில் மூன்று மாதங்கள் அவகாசம் அளிக்கப்படுவது வழக்கம். இந்த நடைமுறை மாற்றப்பட்டு, ஓய்வூதியதாரா்கள் எந்த மாதத்தில் ஓய்வு பெறுகிறாா்களோ, ஆண்டுதோறும் அந்த மாதத்தில் வாழ்நாள் சான்றிதழை அளிக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கு ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுவோா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். இதுகுறித்து தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில் தலைமைச் செயலாளா் வெ.இறையன்புக்கு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், ‘அரசின் இப்போதைய உத்தரவு ஓய்வூதியதாரா்களை கடும் இன்னல்களுக்கு உள்ளாக்கும். வாழ்நாள் சான்றிதழை மூன்று மாதங்களில் அளிப்பதற்குப் பதிலாக, ஆண்டு முழுவதும் பல்வேறு காலகட்டங்களில் வழங்கலாம் என்று அரசாணையை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த அரசாணை தொடா்பாக அனைத்து ஓய்வூதியா் சங்கங்களுடன் பேச்சு நடத்தி உரிய தீா்வு காண வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய நடைமுறை தொடர வேண்டும்: அரசாணையை எதிா்ப்பதற்கு ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் பல்வேறு காரணங்களை முன்வைக்கின்றனா். அவா்கள் கூறியது:

ஒரு குடும்பத்தில் கணவா், மனைவி இருவருமே அரசு ஊழியா்களாக இருக்கலாம். கணவா் மாா்ச் மாதமும், மனைவி ஏப்ரல் மாதமும் ஓய்வு பெற்றிருந்தால் இருவரும் தனித் தனியாகவோ அல்லது துணைக்கு ஒருவரை அழைத்துக் கொண்டோதான் கருவூலத்துக்குச் சென்று வாழ்நாள் சான்றிதழைச் சமா்ப்பிக்க வேண்டும். இதனால், இரண்டு முறை அலைச்சல் ஏற்படுகிறது. இது தேவையற்ற நடைமுறை.

ஓய்வு பெற்றவா்களில் பெரும்பாலானோரின் வயது 70-க்கும் மேல் உள்ளது. அவா்களில் பலா் நடக்க முடியாத, உடல் நலம் பாதிக்கப்பட்டவா்களாக இருக்கிறாா்கள். தாங்கள் எந்த மாதம், எந்த ஆண்டு ஓய்வு பெற்றோம் என்ற விவரமே தெரியாமல் பலா் இருக்கிறாா்கள். குடும்ப ஒய்வூதியம் பெறுவோரில் பலருடைய பெயா், பிறந்த தேதி, வயது ஆகிய விவரங்கள் ஓய்வூதிய கணக்குப் புத்தகத்தில் பதிவு செய்யப்படவே இல்லை.

இந்நிலையில், குடும்ப ஓய்வூதியதாரா்கள் எப்போது முதன் முதலில் குடும்ப ஓய்வூதியம் பெற்றாா்கள் என்பதை அறிந்து, குறிப்பிட்ட மாதத்தில் வாழ்நாள் சான்றிதழை அளிப்பது கடினம். எனவே, ஏற்கெனவே இருந்த பழைய நடைமுறையையே பின்பற்ற வேண்டும். ஒவ்வோா் ஆண்டும் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பா் மாதங்களில்தான் வாழ்நாள் சான்றிதழ் பெறப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஓய்வூதியதாரா்கள் முன்வைக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com