
மேல் கோதையாறு அணைப்பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பன் புல்வெளி புதரில் அயர்ந்து தூங்கும் காட்சி வெளியாகியுள்ளது.
தேனி மாவட்டம், சின்னமனூா் பகுதியில் சுற்றித்திரிந்த அரிக் கொம்பன் யானையை வனத்துறையினா் சின்னஓவுலாபுரம் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனா். பின்னா், அந்த யானையை முழுமையாக பரிசோதித்து, முதலுதவி சிகிச்சை செய்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் மேல் கோதையாறு அணை வால்வு ஹவுஸ் பகுதியில் விட்டனா்.
தொடா்ந்து, அந்த யானையை வனத்துறையினரும் கால்நடை மருத்துவக் குழுவினரும் அதன்கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள ஜி.பி.எஸ். கருவி மூலம் கண்காணித்து வருகின்றனா்.
புல்வெளி புதரில் அயர்ந்து தூங்கும் அரிக்கொம்பன்
ஏற்கெனவே செலுத்தப்பட்டிருந்த மயக்க ஊசியின் தாக்கத்திலிருந்து அரிக்கொம்பன் விடுபட்டு நீா் மட்டும் அருந்திய நிலையில், புற்கள், தாவரங்களை உண்ணத் தொடங்கி மேல் கோதையாறு அணை அருகில் உள்ள வனப்பகுதியில் இயல்பாக சுற்றித்திரிகிறது என வனத்துறையினா் தெரிவித்தனா்.
இந்நிலையில், மேல் கோதையாறு அணை அருகில் உள்ள புல்வெளியில் உள்ள புதரில் அரிக்கொம்பன் நன்கு அயர்ந்து உறங்கும் காட்சி வெளியாகியுள்ளது. சாரல் மழையில் நனைந்தபடி மிகுந்த களைப்பில் நன்கு அயர்ந்து உறங்கும் காட்சி மனம் நெகிழ வைப்பதாக உள்ளது.
நல்ல உடல் நலத்தோடு உள்ளதாகவும் வனத்துறையினர் அதன் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.