மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு திங்கள்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 727 கன அடியிலிருந்து 867 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவை விட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் திங்கள்கிழமை காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 103.41 அடியிலிருந்து 103.35 அடியாக குறைந்துள்ளது.
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.25 டி.எம்.சி.ஆக உள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததும் குறித்த நாளான ஜூன் 12 ஆம் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த ஆண்டு (2022) மேட்டூர் அணையில் நீர் இருப்பும் நீர்வரத்தும் திருப்திகரமாக இருந்ததால் ஜூன் 12 ஆம் தேதிக்கு முன்பாக விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று மே 24 ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார்.
நடப்பு ஆண்டு அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதால் குறித்த நாளான ஜூன் 12 ஆகிய இன்று தமிழக முதல்வர் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார்
தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக தாமதம் இன்றி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குறித்த நாளில் தண்ணீர் திறக்கப்படுவதால் விளைச்சல் அதிகரிக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மேட்டூர் அணையில் 90 ஆண்டுகால வரலாற்றில் குறித்த நாளான ஜூன் 12 ஆம் தேதி 19 ஆவது ஆண்டாக இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று 11 ஆண்டுகள் முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மற்ற ஆண்டுகள் தாமதமாகவே காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.