தமிழகத்துக்கு அமித் ஷா வரும்போதெல்லாம் மின் தடை ஏற்படுவது எதனால் என குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை பாஜகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. கூட்டணியில் இருந்தால் கட்சிக்காக தனிப்பட்ட முறையில் பணியாற்றக் கூடாதா?
9 ஆண்டுகாலம் பாஜக தமிழகத்துக்கு என்ன செய்தது என கூறும் முதல்வர் மு.க. ஸ்டாலின், எய்ம்ஸ் மருத்துவமனையை மட்டுமே கணக்கில் கொண்டு பேசி வருகிறார்.
கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களை தமிழக மக்களுக்கு கொண்டுசென்று சேர்ந்திருக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், திமுக அரசை தான் குற்றம் சாட்டுவேன். அது முதல்வரின் தவறு. மக்களுக்காக கொண்டு வந்த திட்டங்கள் குறித்து திமுக அரசுக்கு தெரியவில்லை.
அமித் ஷா வரும்போது மின்தடை போன்ற பிரச்னை நடந்துள்ளது. அவர் பயண திட்டம் குறித்து மாநில அரசுக்கு ஏற்கெனவே தெரியும். பெரியளவு மழை இல்லாதபோதும் மின்தடை ஏற்பட்டது. இதில் தங்களுக்கு தொடர்பில்லை என அரசு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டார்.