இந்தியாவிலேயே முதன்முறையாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறைக்கான பாடப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
இதற்காக வெளிநாட்டு நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நகர வளாகம் என பாளையங்கோட்டை சாந்திநகர் பகுதியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்திற்கு பெயர் சூட்டப்பட உள்ளது என நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக 54 ஆவது நிலை குழு கூட்டம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய பாடத்திட்டங்கள், மாணவர்கள் தொடர்பான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர், பல்கலைக்கழக நிலை குழு கூட்டத்தில் புதிய பாடத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
புதிய பாடத்திட்டங்களில் ஆராய்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அகழாய்வு பணிகளை செய்து வருகிறது. அதன் விளைவாக நல்ல அரிதான தகவல்களும் கிடைத்து வருகிறது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கடல் அகழ்வாய்வுக்கான பாடங்கள் நடந்து வருகிறது. குமரி கண்டத்திற்கான வரலாற்று சின்னங்கள் இருக்கிறதே தவிர உண்மையான அறிவியல் சான்றுகள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை.
தொல்லியல் துறை பாடப்பிரிவுகளை பலப்படுத்துவதன் மூலம் பல்வேறு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறும். தொல்லியல் துறை அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு பாடத்திட்டங்கள் நிறுவப்பட்டுள்ளது. முழுமையான தொல்லியல் துறைக்கான படிப்புகள் மனோன்மணியசுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மட்டும்தான் உள்ளது. பண்டைய வரலாற்றை வெளிக்கொண்டு வந்து நவீன தொழில்நுட்பத்துடன் அறிவியல் ஆய்வு நடத்தும் நிலையில் பல அரிய தகவல்கள் கிடைக்க பெறும்.
குமரிக்கண்டம் லெமூரியா கண்டம் வரலாற்றை கண்டறியும் நோக்கில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறை பாடப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து புதிய பாடத்திட்டங்கள் அமைப்பதற்கு பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.
நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள சாந்தி நகரில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய நகர் வளாகத்திற்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நகர வளாகம் என பெயரிடுவதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் நியமனத்தில் எந்த குளறுபடியும் இல்லை. பேராசிரியர்கள் பற்றாக்குறையும் பல்கலைக்கழகத்தில் இல்லை. ஓய்வு பெற்ற பேராசிரியர்களின் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய பேராசிரியர்கள் நியமனங்கள் வெகு விரைவில் தொடங்கும். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா விரைவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2021 22 ஆம் ஆண்டுக்கான மாணவர்களுக்கு மட்டுமே பட்டங்கள் வழங்கப்படாமல் உள்ளது என அவர் தெரிவித்தார்.