தஞ்சாவூர்: பணி முடிந்து செல்லும்போது அரசு போக்குவரத்து ஊழியர்கள் மீது நள்ளிரவு தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி பணிமனையில் அரசு பேருந்துகளை இயக்காமல் ஒரு மணி நேரமாக நடைபெற்ற போராட்டம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் நகர போக்குவரத்து கிளையில் சுமார் 100க்கும் மேற்பட்ட நகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்தநிலையில் புதன்கிழமை இரவு பணி முடிந்து வீட்டிற்கு செல்லும்போது பேருந்து ஓட்டுநர் அழகுதுரை மற்றும் நடத்துநர் ஆறுமுகம் இருவர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தியதில் காயம் அடைந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து அதிகாலையில் தஞ்சை ஜெபமாலைபுரம் நகர அரசு போக்குவரத்து கிளையில் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், போக்குவரத்து ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை கோஷங்களை எழுப்பி ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் போக்குவரத்து அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
இதனையடுத்து 4 மணி முதல் இயங்க வேண்டிய பேருந்துகள் ஒரு மணி நேர கால தாமதமாக 5.30 மணிக்கு இயக்கப்பட்டது.