சேலம்: சேலம் மாவட்டம், எடப்பாடி கொங்கணாபுரம் அருகே தனியார் உணவகத்தில் வாங்கிய புரோட்டா குருமாவில் பூரான் இருந்ததை அறியாமல் சாப்பிட்ட இருவர் எடப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம் எட்டிக்குட்டைமேடு பகுதியில் செயல்பட்டு வரும் முருக விலாஸ் பெயர் கொண்ட தனியார் உணவகத்தில் கச்சுப்பள்ளி கிராமம் பள்ளிப்பட்டியைச் சேர்ந்த முரளிகிருஷ்ணன், கலையரசன் ஆகிய இருவரும் 7 புரோட்டா குருமாவுடன் பார்சல் கட்டிக்கொண்டு அவர்களது வீட்டில் வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது கடைசியாக புரோட்டா குருமாவில் பூரான் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், புரோட்டா சாப்பிட்டு சிறிது நேரத்திலேயே இருவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டதையறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக இருவரையும் எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து இருவரும் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொங்கணாபுரம் போலீசார் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் தனியார் உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனியார் உணவகத்தில் வாங்கிய புரோட்டா குருமாவில் பூரான் இருந்ததை அறியாமல் சாப்பிட்ட இருவர் மயக்கம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.