மன்னார்குடியில் உள்ள உணவகத்தில் லஞ்சம் தராததால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் உணவகத்தை அடித்து நொறுக்கி உள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வ.உ.சி சாலையில் உள்ள உணவகம், மருந்தகம், மளிகைக் கடை உள்ளிட்ட பகுதிகளில் மூன்று பேர் கொண்ட கும்பல் கடை உரிமையாளர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு வ.உ.சி சாலையில் உள்ள பரோட்டா கடை ஒன்றிற்கு வந்த மூன்று நபர்கள் கடைக்காரரிடம் ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் கடை விற்பனையாளருக்கும் இளைஞர்களுக்கும் இடையே வாக்கவாதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் உணவகத்தில் சாப்பிட வந்த நபர் ஒருவரை அரிவாளால் வெட்டியுள்ளனர்.
மேலும், கடையில் இருந்த உணவு பொருள்கள், பாத்திரங்களை கீழேத் தள்ளி உடைத்து பிரச்னை செய்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், விசாரணை செய்து சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு பிரசாத் என்ற இளைஞரை கைது செய்தனர்.
இதையும் படிக்க: ஒடிசாவில் கோலாகலமாகத் தொடங்கிய ரத யாத்திரை!
தப்பி ஓடிய இருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். மர்மநபர்கள் உணவகத்தை அடித்து நொறுக்கும் சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.