புதுச்சேரி: புதுச்சேரி வவுச்சர் ஊழியர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி பொதுப்பணித்துறையில் 1500க்கு மேற்பட்ட வவுச்சர் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு மாதம் ரூ.12,000 ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஊதியத்தை ரூ.18,000 ஆக உயர்த்தக் கோரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து ஊதியத்தை ரூ.18 ஆயிரமாக உயர்த்தி முதல்வர் என் ரங்கசாமி அறிவித்தார். ஆனால் முதல்வர் அறிவித்தபடி ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் ஊதிய உயர்வு, பணி நிரந்தர கோப்புகளை அதிகாரிகள் திருப்பி அனுப்புவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில் வவுச்சர் ஊழியர்கள் வியாழக்கிழமை காலை, பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர், இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு வெளிப்புற கதவுகள் அடைக்கப்பட்டன. இதனால் அலுவலகத்துக்கு வந்த பலர் உள்ளே செல்ல முடியாமல் சாலை ஓரத்தில் நின்றனர், அவர்கள் தங்களை அலுவலகத்தில் அனுப்புமாறு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.