திருநெல்வேலி: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருநெல்வேலியில் உள்ள பழைமைவாய்ந்த அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனிப்பெருந் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்மன்
நிகழாண்டுக்கான விழாவையொட்டி சனிக்கிழமை காலை சுவாமி- அம்மன் பூங்கோயில் சப்பரம் உள்வீதியுலா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சுவாமி சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது.
நமச்சிவாய முழக்கத்துடன் பக்தர்கள் வழிபட்டனர். இரவு 7 மணிக்கு சுவாமி-அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் திருவீதியுலா நடைபெறுகிறது.
கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு மகாதீப ஆராதனை காட்டப்பட்டதும் நமச்சிவாய முழக்கத்துடன் வழிபட்ட பக்தர்கள்.
தொடர்ந்து திருவிழா நாள்களில் நாள்தோறும் காலை, மாலையில் சுவாமி- அம்மன் பல்வேறு வாகனங்களில் மலர் அலங்காரத்துடன் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.
நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் பரதநாட்டியம், பக்தி சொற்பொழிவு, இசைநிகழ்ச்சிகள் தினமும் மாலை 4 முதல் இரவு 10.30 மணி வரை நடைபெறும்.
விழாவின் சிகர நிகழ்வாக ஜூலை 2 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டம் நடைபெற உள்ளது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ஐயர் சிவமணி மற்றும் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.