சென்னை: சென்னை ஐ.சி.எப் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 25 ஆவது வந்தே பாரத் ரயிலை புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பார்வையிட்டார்.
இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
சென்னை ஐ.சி.எப் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சென்று வெற்றிகரமாக தயாரிக்கப்பட்ட 25 ஆவது வந்தே பாரத் ரயிலை பார்வையிட்டேன்.
வெளிநாடுகளில் தயாரித்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த ரயில் பெட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முயற்சியால் உள்நாட்டிலேயே அதிநவீன வசதிகளுடன் தயாரித்து சாதனைப்படைத்துக் கொண்டிருக்கும் ரயில்வே ஊழியர்களுக்கும் பாராட்டு தெரிவித்தேன்.
25 ஆவது வந்தே பாரத் ரயிலை தயாரிக்கும் பணியாளர்கள் அனைவரையும் பாராட்டி கெளரவித்தேன்.
ரயில்வேத் துறை அதிகாரிகளின் கடுமையான உழைப்பினாலும் பிரதமர் மோடி வழிகாட்டுதல் மற்றும் மத்திய ரயில்வேத் துறை அமைச்சரின் ஊக்கத்தினாலும் மிகச் சிறப்பாக இந்த ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவின் அனைத்து நகரங்களையும் இணைக்கும் 'வந்தே பாரத் ரயில்' மக்கள் அதிகமாக விரும்பி பயணிக்கிறார்கள். விமானங்களில் பயணித்துக் கொண்டு இருந்தவர்கள் கூட இதன் வசதிகளை உணர்ந்து ரயிலில் பயணம் செய்கிறார்கள்.
இதில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் பயணம் செய்யும் மக்கள் நேரடியாக ஓட்டுநருடன் உரையாடலாம், சாப்பிடுவதற்கு மேசை கொடுக்கப்பட்டிருக்கிறது,அவசர காலத்தில் வண்டியை உடனே நிறுத்துவதற்கு சுவிட்ச் கொடுக்கப்பட்டிருக்கிறது, மொபைல் போன்களை சார்ஜ் செய்ய வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது, கழிப்பறைகள் மிக சுகாதாரமான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை பயன்படுத்துவதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. எனவே 'வந்தே பாரத்' இரயில் இவர்களின் தீவிர முயற்சியினால் சிறப்பாக கட்டமைக்கப்பட்டு வருகிறது.
பெரம்பூர் இரயில் பெட்டி தொழிற்சாலையில் இருந்து 71 ஆயிரம் பெட்டிகள் தயார் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான ரயில் பெட்டிகள் தயாரித்த இடமாக மாறி இருக்கிறது.
மேலும், இவை நேபாளம், இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இத்தகைய சாதனையை செய்த அனைத்து அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் வாழ்த்துக்களையும், பிரதர் மோடிக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.