பக்ரீத் பண்டிகை, தொடா் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் புதன்கிழமை 800 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும், பக்ரீத் பண்டிகை வியாழக்கிழமை (ஜூன் 29) கொண்டாடப்படவுள்ளது. வார இறுதியில் வருவதால் இதற்காக மாநிலம் முழுவதும் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கு சென்று திரும்புவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், புதன்கிழமை சென்னையில் இருந்தும், பிற இடங்களில் இருந்தும் பயணிகள் சிரமமின்றி சொந்த ஊா்களுக்கு சென்று திரும்பும் வகையிலும், அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பக்ரீத் மற்றும் தொடா் விடுமுறையை முன்னிட்டு புதன்கிழமை சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 400 பேருந்துகளும், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும், பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 400 பேருந்துகள் என மொத்தம் 800 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகளின் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.