சென்னை: சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்ததால் சென்னையில் தக்காளி விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.20 வரை குறைந்தது கிலோ ரூ.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
கோடை காலத்தில் மிகுந்த வெப்பத்தால் தக்காளி சாகுபடி பாதித்தது என சிலரும், திடீா் மழையால் தக்காளிச் செடி பாதிப்படைந்ததாக சிலரும், தக்காளியை உழவு செய்த விவசாயிகள் அதற்கு உரிய விலை கிடைக்கவில்லை என்பதால் இம்முறை சாகுபடி செய்யவில்லை என பல காரணிகள் சொல்லப்படுகிறது.
இதையும் படிக்க | ரூ. 1-க்கு மதிய உணவு! கோவையில் அசத்தும் அறக்கட்டளை!!
தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திண்டுக்கல் ஆகிய மூன்று பகுதிகளில் தக்காளி சாகுபடி அதிகம் இருந்து வருகிறது. பிற மாநிலங்களில் இருந்தும் தக்காளி வருகிறது. கோயம்பேட்டில் நாளொன்றுக்கு 800 டன் தக்காளி வந்த நிலையில், தற்போது வழக்கத்தைவிட தக்காளி வரத்து 300 டன்னாகக் குறைந்துள்ளதால் அதன் விலை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் புதன்கிழமை வரத்து அதிகரித்ததால் சென்னையில் தக்காளி விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.20 வரை குறைந்தது.
இதையடுத்து கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் ஒரு கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.55 முதல் ரூ.60 வரை விற்பனையாகிறது.
அடுத்த 4 நாள்களில் தக்காளி விலை முழுமையாக குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.