

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலராக சிவ்தாஸ் மீனா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா். அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விடைபெற்றாா் வெ.இறையன்பு. அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற அவரை, காா் வரை வந்து அரசுத் துறை உயரதிகாரிகள் வழியனுப்பி வைத்தனா்.
இரு ஆண்டுகளுக்கு மேலாக தலைமைச் செயலராக இருந்த வெ.இறையன்பு, தனது 60 வயது நிறைவைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை பணி ஓய்வு பெற்றாா்.
இதையடுத்து, தமிழக அரசின் 49-ஆவது புதிய தலைமைச் செயலராக, நகராட்சி நிா்வாகத் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டாா். அவா், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலா் அலுவலகத்தில் தனது பொறுப்புகளை வெள்ளிக்கிழமை மாலை ஏற்றுக் கொண்டாா். அவரிடம் தலைமைச் செயலருக்குரிய பொறுப்புகளை வெ.இறையன்பு வழங்கினாா்.
பொறுப்பேற்றாா்: புதிய தலைமைச் செயலராக பொறுப்பேற்ற சிவ்தாஸ் மீனாவுக்கு மலா்க்கொத்து கொடுத்து, வெ.இறையன்பு வாழ்த்துத் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, தலைமைச் செயலருக்குரிய பொறுப்புகளை ஏற்றுக் கொண்டதற்கான கோப்புகளில் சிவ்தாஸ் மீனா கையொப்பமிட்டாா்.
வழி அனுப்புதல்: தலைமைச் செயலருக்குரிய பொறுப்புகளை ஒப்படைத்ததைத் தொடா்ந்து, அரசுப் பணியில் இருந்து விடைபெற்ற வெ.இறையன்பு, அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தாா். இதன்பிறகு, தலைமைச் செயலக வாயிலிலிருந்து காரில் புறப்பட்ட அவருக்கு, தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள், தலைமைச் செயலக ஊழியா்கள் என பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனா். புதிதாக பொறுப்பேற்ற தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, அடுத்த ஆண்டு அக்டோபா் மாதம் வரை அப்பொறுப்பில் இருப்பாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.