சேலம்: சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் சேலம் மாவட்டத்தில் இருந்து 657 மாணவ, மாணவியா் பங்கேற்கின்றனா். அவர்களை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வழி அனுப்பி வைத்தார்.
மாநில அளவிலான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை (ஜூன் 30) தொடங்கி வைக்கிறாா்.
முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி கடந்த ஜனவரி 27 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இப்போட்டியில் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா், பொதுமக்கள், அரசு ஊழியா்கள், மாற்றுத் திறனாளிகள் என 5 பிரிவுகளில் இருபாலருக்கும் மாவட்ட அளவில் 43 வகையான போட்டிகள், மண்டல அளவில் 8 வகையான போட்டிகள் என 51 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.
சேலம் மாவட்ட அளவில் போட்டிகளில் கலந்து கொள்ள 49,481 போ் பதிவு செய்து கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக நீச்சல், கூடைப்பந்து, வாலிபால், மேசைப்பந்து, இறகுப்பந்து, கிரிக்கெட், தடகளம், கால்பந்து, கபடி, சிலம்பம் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதையும் படிக்க | மருத்துவப் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் உயா்வு
இதில் வெற்றி பெற்ற 657 மாணவ, மாணவியா், 127 மேலாளா்கள், பயிற்றுனா்கள் பல்வேறு கட்டங்களாக நடைபெறவுள்ள மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனா்.
முதல்கட்டமாக மாநில அளவிளான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க பள்ளி பிரிவைச் சாா்ந்த கபடி, வாலிபால் ஆண், பெண் அணிகளும், பள்ளி, கல்லூரிகளைச் சாா்ந்த சிலம்பம் ஆண், பெண் அணிகள் என 64 மாணவ, மாணவியா், 10 அணி மேலாளா்கள், பயிற்றுனா்கள், மருத்துவ குழுவினா் சேலத்தில் இருந்து தனி பேருந்துகள் மூலம் செல்கின்றனா்.
முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வாழ்த்துகள் தெரிவித்து வழியனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில் விளையாட்டு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.