சென்னை: சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.50 ஆகவும், வணிக பயன்பாட்டிற்கான விலை ரூ.223 அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நிய செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு உருளையின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றியமைத்து வருகின்றன.
இந்நிலையில், மார்ச் முதல் நாளான புதன்கிழமை வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளையின் விலை அதிரடியாக ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை!
இந்த விலை அதிகரிப்பால் கடந்த மாதம் ரூ.1068 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்த சமையல் எரிவாயு உருளையின் விலை தற்போது ரூ.50 அதிகரித்து ரூ.1118.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. .
இதேபோன்று வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு உருளையின் விலை ரூ.223 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு உருளை ரூ.2,268 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் சமையல் எரிவாயு உருளையின் விலை உயர்த்தப்படாமல் இருந்து வந்த நிலையில், 3 மாநில தேர்தல், இடைத்தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் ஏழு மாதங்களுக்கு பின்னர் மீண்டு விலை உயர்த்தப்பட்டுள்ளது மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.