ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை (மார்ச் 2) 8 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்றாவது சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் தென்னரசு வாக்கும் எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா காலமானதைத் தொடர்ந்து, இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்பட 77 பேர் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் 82,138 ஆண் வாக்காளர்கள், 88, 037 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலத்தினர் 17 பேர் என மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்தனர். தேர்தலில் மொத்தம் 74.79 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது.
வாக்கு எண்ணிக்கை சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
16 மேஜைகளில் 15 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்காக கீழ்த்தரையிலும், முதல் தளத்திலும் 2 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கீழ்த்தரையில் 10 மேஜைகளிலும் முதல் தளத்தில் 6 மேஜைகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
மூன்று சுற்று வாக்கு எண்ணிகை முடிவடைந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 31,928 வாக்குகளுடன் முதலிடத்திலும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 10,618 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் 1,832 வாக்குகள் பெற்ற மூன்றாவது இடத்திலும், தேமுதிக 220 வாக்குகள் பெற்று அடுத்த இடத்தில் உள்ளனர்.
இந்நிலையில், 4 ஆவது சுற்று வாக்கு எண்ணும் நடைபெற்று வரும் நிலையில், வாக்கும் எண்ணும் மையத்தில் இருந்து அதிமுக வேட்பாளர் தென்னரசு வெளியேறினார்.
வாக்கு எண்ணும் மையத்தில் அதிமுக சார்பாக அவர் மட்டுமே இருந்த நிலையில் விரக்தியில் வெளியேறினார்.
வாக்கு எண்ணும் மையத்தில் வெளியேறிய அதிமுக வேட்பாளர் தென்னரசு, பணநாயகம் வென்றது, ஜனநாயகம் தேற்றது என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துவிட்டு காரில் புறப்பட்டு சென்றார்.