ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி திமுக ஆட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் என காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த திங்கள்கிழமை(பிப். 27) நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று(வியாழக்கிழமை) 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் 39 ஆயிரம் வாக்குகளுடன் முன்னிலையில் இருக்கிறார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'இந்த வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின்தான். அவருக்குதான் இந்த வெற்றியின் பெருமைகள் சென்று சேரும்.
ஏனெனில் திமுக கொடுத்த 80% வாக்குறுதிகளை அவரது ஆட்சியில் நிறைவேற்றியுள்ளார். அதற்கு அங்கீகாரமாக மக்கள் இந்த வெற்றியை தந்திருக்கிறார்கள்.
மதச்சார்பற்ற கூட்டணி குறிப்பாக ராகுல் காந்தி மீது தமிழக மக்கள் வைத்திருக்கும் அன்பிற்கும் மரியாதைக்கும் எடுத்துக்காட்டாக இந்த வெற்றியைப் பார்க்கிறேன். ராகுலின் ஒற்றுமை நடைப்பயணத்தின் மூலமாக அவர் மீது தமிழக மக்களுக்கு ஓர் ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
அதுபோல வரவிருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வெற்றிக்கும் இது ஒரு எடுத்துக்காட்டு.
ஈரோடு கிழக்கு தொகுதியில் சில திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. அமைச்சர் முத்துசாமியுடன் சேர்ந்து அரசின் உதவியோடு ஈரோடு மக்களுக்கு வேண்டிய திட்டங்களை நிறைவேற்றுவேன்' என்று தெரிவித்தார்.