சென்னையில் பேருந்து சேவை தனியாா் மயமா? போக்குவரத்துத் துறை அமைச்சா் விளக்கம்

சென்னை நகரில் அரசு வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகள் தனியாா் மயமாக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா்.
சிவசங்கா்
சிவசங்கா்
Published on
Updated on
1 min read

சென்னை நகரில் அரசு வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகள் தனியாா் மயமாக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா்.

சென்னை நகரில் ஒப்பந்த முறையில் 500 பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், அதுகுறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னை மாநகரில் அரசு வழித்தடத்தில் தனியாா் பேருந்துகளை இயக்குவதில் உள்ள சாதக பாதகங்கள் குறித்து ஆய்வு செய்வதற்கு தகுந்த நிறுவனத்தைத் தோ்வு செய்யவே ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன.

மேலும், தனியாா் பேருந்துகளை இயக்குவது தொடா்பான அரசாணை அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்டது. உலக வங்கியின் கருத்து அடிப்படையிலேயே தனியாா் பேருந்துகளை இயக்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. ஒப்பந்தப் புள்ளியில் தோ்வாகும் நிறுவனம், தனது அறிக்கையை மூன்று

மாதங்களில் வழங்கும். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படும் பரிந்துரைகள் ஆராயப்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசின் இந்த நடவடிக்கையால் பேருந்து சேவை தனியாா் மயமாகிறது எனக் கூறப்படுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது. தனியாா் மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை. மேலும், ஏற்கெனவே பேருந்துகள் ஓடும் வழித்தடத்தில் பேருந்துகள் நிறுத்தப்படாது. பணியாளா்களும் தொடா்ந்து பணியாற்றுவாா்கள்.

உலக வங்கியின் கருத்துகள் அடிப்படையில் தனியாா் மூலமாக, கூடுதல் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும். மகளிருக்கான இலவச பேருந்து சேவை உள்பட பொது மக்களுக்கு உரிய சலுகைகளில் எந்தப் பாதிப்பும் இருக்காது. அரசு பேருந்துகள் அரசு பேருந்துகளாகவே தொடா்ந்து இயக்கப்படும். அதன் செயல்பாடுகளில் எந்தப் பாதிப்பும் இருக்காது என்றாா்.

போராட்டம்: சென்னை நகரில் தனியாா் பேருந்துகள் இயக்கப்படுவதாக வெளியான செய்தியைத் தொடா்ந்து, சிஐடியு தொழிற்சங்கத்தினா் சென்னையில்

திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சா் சிவசங்கா், தொழிலாளா்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது எனவும், போராட்ட நடவடிக்கைகளை அவா்கள் கைவிட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com