வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரம் ஸ்ரீ சென்றாய பெருமாள் திருக்கோயில் புதிய மரத்தேர் வெள்ளோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வாழப்பாடி அக்ரஹாரத்தில், 204 ஆண்டுகள் பழமையான பூதேவி, சீதேவி சமேத சென்றாயப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு ஆகமவிதிப்படி இலுப்பை மரத்தில், சிற்ப வேலைப்பாடுகளுடன் ரூ. 25 லட்சம் செலவில் புதிய மரத்தேர் வடிவமைக்கப்பட்டது. இந்த புதிய மரத்தேர் வெள்ளோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
பக்தர்களும், இளைஞர்களும் மேள வாத்திய இசைக்கேற்ப கிராமிய சேர்வை நடனமாடி மகிழ்ந்தனர். தேரோடும் வீதிகளில் வீடுகள் தோறும் தாம்பூலம், அவுள், கடலை, வெல்லத்தோடு, திருவீதி உலா வந்து சுவாமிக்கு படையல் வைத்தனர். தேர் வடம் பிடித்து இழுத்த பக்தர்களுக்கு, குளிர்பானங்கள் இனிப்பு, உணவு பொருட்களை வழங்கி வரவேற்பு அளித்தனர்.
இதையும் படிக்க: வருமானம் பலமடங்கு உயரப்போகுது இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்
குடியிருப்பு பகுதிகளில் பொரி உருண்டை, வாழைப்பழம் ஆகியவற்றை தேரின் மீது வீசி பக்தர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தேர் வெள்ளோட்டத்தையொட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத சென்றாய பெருமாள், மலர் மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.