முதல்வரின் வாழ்க்கை வரலாற்றை பயோ பிக்காக எடுக்கலாம்: ஏ.ஆர்.முருகதாஸ்

முதல்வரின் வாழ்க்கை வரலாற்றை பயோ பிக்காக எடுக்கலாம் என்று பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

முதல்வரின் வாழ்க்கை வரலாற்றை பயோ பிக்காக எடுக்கலாம் என்று பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். 

முதல்வா் மு.க.ஸ்டாலினின் 70-ஆவது பிறந்த நாளையொட்டி, ‘எங்கள் முதல்வா் எங்கள் பெருமை’ என்ற பெயரில் சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் இந்தக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வழிகாட்டுதலில், சென்னை கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கடந்த பிப். 28-இல் திறந்து வைத்தாா். மாா்ச் 12-ஆம் தேதியுடன் (ஞாயிற்றுக்கிழமை) இந்த புகைப்படக் கண்காட்சி நிறைவு பெறுகிறது. 

நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு உருவாக்கப்பட்டிருக்கிறது இந்தக் கண்காட்சி அரங்கம். திமுக தொண்டா், பொதுக்குழு உறுப்பினா் (1978), இளைஞரணிச் செயலா் (1982), சட்டப்பேரவை உறுப்பினா் (1989), சென்னை மாநகர மேயா் (1996), திமுக பொருளாளா் (2015), திமுக தலைவா் (2018), தமிழக முதல்வா் (2021) என ஒரே ஃபிரேமில் அமைக்கப்பட்ட எட்டு புகைப்படங்கள் முதல்வா் மு.க.ஸ்டாலின் இளமைக் காலம் முதல் தற்போது வரையிலான முகத்தோற்றங்களை நம் கண் முன் நிறுத்துகின்றன. இந்த கண்காட்சி அரங்குகளை நாள்தோறும் பள்ளி மாணவா்கள், பொதுமக்கள், திமுகவினா் என ஆயிரக்கணக்கானோா் பாா்வையிட்டு வருகின்றனா்.

பாா்வையாளா்களின் எண்ணிக்கை இதுவரை 35,000-ஐ கடந்துள்ளது. இந்நிலையில், ‘எங்கள் முதல்வா் எங்கள் பெருமை’ புகைப்பட கண்காட்சியை நடிகர் ரஜினிகாந்த் சனிக்கிழமை பார்வையிட்டார். மேலும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும் பார்வையிட்டார். அப்போது ஏ.ஆர்.முருகதாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், முதல்வர் ஸ்டாலின், மிகப்பெரிய தமிழினத் தலைவரின் மகனாக இருந்த போதிலும் தனக்கென ஒரு வரலாற்றை உருவாக்கியவர் என்பது அனைவருக்கும் தெரியும். புகைப்படக் கண்காட்சி அவரோடு பயணித்த உணர்வை அளிக்கிறது. மிகப்பெரிய பிரமிப்பையும் மிகபெரிய பெருமையும் மிகப்பெரிய மரியாதையும் அவர்மீது நமக்கு உண்டாகுகிறது. 

தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் இந்த அரிய வரலாற்று பதிவுகளை பார்த்து மகிழ வேண்டும். இந்த கண்காட்சியில் இருக்கும் வரலாற்று பதிவுகளை நிச்சயமாக இந்திய அளவில் ஒரு பயோ பிக்காக எடுக்க முடியும். அதற்கான பிரமாண்டங்களும் மனதை பாதிக்கும் சம்பவங்களும் இருக்கின்றன என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com