தமிழ்த் திரைப்பட நடிகரும், இயக்குநருமான மனோபாலா(69) உடல் இன்று பகல் 1 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.
கல்லீரல் தொடர்பான பிரச்னைக்காக கடந்த 10 நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த மனோபாலா நேற்று உயிரிழந்தார்.
இவரின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த், முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்த நிலையில், நடிகர் விஜய், சிவக்குமார், இயக்குநர் ஷங்கர், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட திரைத்துறையினர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து இன்று காலை 11 மணியளவில் புறப்பட்ட இறுதி ஊர்வலம் ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு மத்தியில் சுமார் ஒன்றரை மணிநேரத்திற்கு பிறகு 12.30 மணியளவில் வளசரவாக்கம் மின்மயானத்தை அடைந்தது.
அங்கு இறுதி சடங்குகள் நடைபெற்ற பிறகு பகல் 1 மணியளவில் மனோபாலாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.