திமுக முன்னோடி மிசா. பி. மதிவாணன் காலமானார்: முதல்வர் இரங்கல்

திமுக மூத்த முன்னோடிகளில் ஒருவரான மிசா. பி. மதிவாணன் மறைவுக்கு கழகத் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 
திமுக முன்னோடி மிசா. பி. மதிவாணன் காலமானார்: முதல்வர் இரங்கல்


திமுக மூத்த முன்னோடிகளில் ஒருவரான மிசா. பி. மதிவாணன் மறைவுக்கு கழகத் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கழகத்தின் மூத்த முன்னோடிகளில் ஒருவரான மிசா. பி. மதிவாணன் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.

மிசா. பி.மதிவாணன் 1973 இல் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டக் கழகப் பொறுப்பாளராகவும், பின்னாளில் செம்பனார்கோவில் ஒன்றியக் கழகத்தின் பொறுப்பாளராக 2003 வரையிலும் கழகப்பணியாற்றியவர். பின்னர் தலைமைச் செயற்குழு உறுப்பினர், விவசாயத் தொழிலாளர் அணியின் மாநிலச் செயலாளர் என மேலும் பல்வேறு கழகப் பொறுப்புகளைச் சிறப்புற வகித்தவர். 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுவில் கருணாநிதியை தலைவராக முன்மொழிந்தவர்களில் மிசா. பி. மதிவாணனும் ஒருவர் ஆவார்.

இவற்றை எல்லாம் விட, 1965-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று மூன்று மாதங்கள் கடுங்காவல் தண்டனையும், மிசா காலக்கட்டத்தில் ஓராண்டு சிறைவாசமும் அனுபவித்த பெருமைக்குரிய கழகப் போராளி ஆவார்.

செம்பனார்கோவில் ஒன்றியத்தில் தொடர்ச்சியாக 23 ஆண்டுகள் கழகத்தின் முப்பெரும் விழாவை, மூன்று நாட்கள் விழாவாக நடத்திப் பெருமை சேர்த்தவர். கழகத்துக்கு இவர் ஆற்றிய பெரும்பணிகளுக்கான அங்கீகாரமாக, பெரியார் விருது பெற்றவர்.

இத்தகைய பெருமைகளுக்குரிய திமுக முன்னோடி மிசா.பி. மதிவாணன் மறைவு, கழகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். கழக வரலாற்றில் அவர் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com