சென்னை: மோக்கா புயல் கரையைக் கடந்த நிலையில், மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பிய சென்னையில் கடுமையான வெப்ப அலை வீசிய நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் ஒரு ஆறுதல் செய்தியை தெரிவித்துள்ளார்.
மோக்கா புயல் நேற்று கரையை கடந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
மேலும், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் காரணமாக சிலருக்கு அசௌகரியங்கள் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கையில் தெரவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றும், இன்றும் கோடை வெயில் சுட்டெரித்தது.
திங்கள்கிழமை காலை 10 மணிக்கு வெப்பம் உக்கிரம் அடையத் தொடங்கியது. மதியம் 2.30 மணிவரை வெப்பத்தின் தீவிரம் குறையவில்லை. கடந்த இரண்டு நாள்களாக கடற்காற்றும் நிலப்பரப்புக்கு வராத நிலையில், மாலை நேரங்களும் அடுப்புக்குள் வாழ்வது போலவே மக்களை உணர வைத்தது.
இந்த நிலையில்தான் சென்னை மற்றும் கடற்கரையோர மாவட்ட மக்கள் சற்று ஆறுதல் அடையும் வகையில் தமிழ்நாடு வெதர்மேன் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், மிக மகிழ்ச்சியான செய்தி - கடற்காற்றானது நகரப் பகுதியை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. இதனால், ஈரப்பதமான காற்று நகரக்குள் துள்ளிக்குதித்து ஓடும். இதனால், இன்று நாள் முழுக்க அனுபவித்த வெப்பத் துயரத்திலிருந்து ஓரளவுக்கு ஆறுதல் கிடைக்கலாம். மேற்கு மாவட்டங்களில் வெப்பம் நீடிக்கும் என்று பதிவிட்டுள்ளார்.
இதனால், கடந்த இரண்டு நாள்களாக மாலை நேரத்தில் இருந்த கடுமையான புழுக்கம் இன்று சற்று குறையும் என்று சென்னை மக்கள் மகிழ்ச்சி அடையலாம்.