தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் செயல்பட்ட அரசு மதுபான பாரில் மது குடித்த 2 பேர் பலியான விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பாருக்கு சீல் வைத்த நிலையில் டாஸ்மாக் கடைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை திறப்பதற்கு முன்பே கடையின் அருகே இருந்த அரசு மதுபான பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றுள்ளது. இங்கு மது வாங்கி குடித்த குப்புசாமி என்ற முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும் விவேக்(36) என்ற இளைஞர் ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விவேக் என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து அரசு மதுபான பாரில் மது அருந்தியதில் பலியானோர் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து தஞ்சை கிழக்கு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பாருக்கு சீல் வைத்த நிலையில் தற்போது டாஸ்மாக் கடைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
தஞ்சை பொறுப்பு கோட்டாட்சியர் பழனிவேல் தலைமையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.