கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய மேலும் 3 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதன்படி பவுத்திரம், காந்திகிராமம், க.பரமத்தி ஆகிய இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேசமயம் கரூரில் திமுகவின் எதிர்ப்பால் 10 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடத்தப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரிச்சோதனை நடைபெற்று வருகிறது. இதனடையே, வருமான வரிச்சோதனை ஒன்றும் எங்களுக்குப் புதிதல்ல என்று தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது, எனது சென்னை மற்றும் கரூர் வீடுகளில் சோதனை நடைபெறவில்லை.
எனது சகோதர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் இல்லங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனைக்கு வரும் போது சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் இது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி விளக்கம் அளித்துள்ளார் என்றார்.