
திருக்காட்டுப்பள்ளி: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே திருசினம்பூண்டியை சேர்ந்த ரெளடி வி. எஸ்.எல். குமார் (எ) முருகையன் செவ்வாய்க்கிழமை (அக்.31) இரவு மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருசினம்பூண்டி கீழப்படுகை பகுதியைச் சேர்ந்தவர் ராஜாங்கம் மகன் வி.எஸ்.எல். குமார் (எ) முருகையன் (50). இவர் வழக்கமாக திருக்காட்டுப்பள்ளிக்கு வந்து இரவு இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்புவது வழக்கம். அதுபோல் செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் திருவையாறு - கல்லணை சாலையில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோயிலுக்கு மேற்கே சுமார் 200 மீட்டர் தூரத்தில் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று அவரது வாகனத்தில் மோதியதில் குமார் தடுமாறி சாலையின் தென்புறம் விழுந்தார்.
தொடர்ந்து, முருகையனின் காலில் மர்ம நபர்கள் வெட்டியதால், நிலை தடுமாறி விழுந்துள்ளார். பின், அவரது தலையில் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த தோகூர் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் பார்வையிட்டார். திருவையாறு டிஎஸ்பி ராமதாஸ், திருக்காட்டுப்பள்ளி ஆய்வாளர் ஜெயக்குமார், உதவி ஆய்வாளர் கோவிந்தராஜன் உள்ளிட்டோர் இது குறித்து வழக்கு பதிந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
திருச்சி இரட்டை கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் முருகையன் தொடர்பு உள்ளவர் என்றும், ரெளடிப் பட்டியலில் உள்ளதாகவும் தோகூர் போலீசார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.