டிடிஎஃப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன்

பைக் சாகசத்தின்போது விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைதான யூ டியூபா் டி.டி.எஃப்.வாசனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சென்னை உயா்நீதிமன்றம்.
டிடிஎஃப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன்
Published on
Updated on
2 min read


சென்னை: பைக் சாகசத்தின்போது விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைதான யூ டியூபா் டி.டி.எஃப்.வாசனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சென்னை உயா்நீதிமன்றம்.

40 நாள்களுக்கும் மேல் சிறையில் இருப்பதால், ஜாமீன் வழங்க வேண்டும் என்று டிடிஎஃப் வாசன் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, வாசனுக்கு, 3 வாரங்களுக்கு காவல்நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

பைக் சாகசத்தின்போது விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைதான யூ டியூபா் டி.டி.ஃஎப்.வாசனுக்கு ஜாமீன் வழங்க தொடர்ந்து சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவந்தது. ஜாமீன் வழக்கொன்றின்போது, அவரது யூடியூப் சேனலை மூடிவிட்டு, பைக்கை எரித்துவிடலாம் எனவும் நீதிபதி கருத்து தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

யூடியூபா் டிடிஎஃப் வாசன் கடந்த செப். 17-ஆம் தேதி காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் அதிவேகமாக சென்றபோது வீலிங் செய்து நிலைதடுமாறி விழுந்ததில் அவரது வலது கை முறிந்தது. பைக் பல அடி தொலைவுக்கு பறந்து விழுந்தது. அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் அவா் கைது செய்யப்பட்டாா். அவா் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில், டி.டி.ஃஎப்.வாசன், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை காஞ்சிபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. எனவே, ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன் அக்டோபர் 5ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், ‘மனுதாரரை யூடியூபில் 45 லட்சம் போ் பின்தொடா்கிறாா்கள். ரூ. 20 லட்சம் மதிப்பிலான பைக்கில் ரூ. 4 லட்சம் வரை விலையிலான பாதுகாப்பு உடை அணிந்து அவா் சென்றதால், விபத்திலிருந்து உயிா் தப்பி இருக்கிறாா். இதைப்பாா்த்து மற்ற இளைஞா்களும் தங்கள் பெற்றோரிடம் ரூ. 2 லட்சம் விலையுள்ள பைக்கை வாங்கித்தரும்படி கேட்டு, இது போன்ற அபாயகரமான சாகசங்களில் ஈடுபடுகிறாா்கள். சிலா் கொள்ளைச் சம்பவங்களிலும் ஈடுபடுகிறாா்கள்’ எனக் கூறி ஜாமீன் வழங்க எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது

பாடமாக அமைய
வழக்கை விசாரித்த நீதிபதி, விளம்பரத்துக்காகவும், மற்ற இளைஞா்களை தூண்டும் வகையிலும் செயல்பட்ட மனுதாரரின் செயல், ஒரு பாடமாக அமைய வேண்டும். தொடா்ந்து நீதிமன்ற காவலிலேயே இருக்கட்டும் எனக் கூறி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

அப்போது, கையில் ஏற்பட்ட காயத்துக்கு 20 நாள்களுக்கும் மேலாக சிகிச்சைப் பெற்று வருவதால், டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என அவரது தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. காயத்துக்கு சிறை மருத்துவா்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, இளைஞா்களைத் தூண்டும் வகையில் செயல்பட்ட மனுதாரா், தனது யூடியூப் சேனலை மூடிவிட்டு, பைக்கை எரித்துவிட்டு வரும்படி கருத்து தெரிவித்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com