நாமக்கல்: ஒருவந்தூர் நீரேற்று பாசன சங்க வளாகத்தில் இருந்த தேக்கு மரங்களை வெட்டியதாக, விவசாய முன்னேற்ற கழகத்தின் நிறுவனரும், வழக்குரைஞருமான செல்ல.ராசாமணி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம், ஒருவந்தூரில் கூட்டுறவுத் துறை சார்ந்த நீரேற்று பாசன சங்கம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியின் போது இவர் அதன் தலைவராக செயல்பட்டு வந்தார். அந்த காலகட்டத்தில் சங்க வளாகத்தில் இருந்த 16 காய்ந்த தேக்கு மரங்களை வெட்டி ரூ.85 ஆயிரத்துக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, அண்மையில் மாவட்ட ஆட்சியர் ச.உமாவிடம் சங்க உறுப்பினர்கள் சிலர் புகார் மனு அளித்தனர். மேலும் நீரின்றி பாசன சங்கத்தின் கூட்டுறவுத் துறை சிறப்பு செயல்முறை அலுவலர் ஒருவர் மோகனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையும் படிக்க | மேட்டூர் அருகே கணவனை கொலை செய்த மனைவி கைது
அந்த புகாரின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை காலை செல்ல.ராசாமணியை அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட செல்ல.ராசாமணி தற்போது நாமக்கல் நல்லிபாளையம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், மோட்டார் வாகன போக்குவரத்து தொழில் கூட்டமைப்பின் தலைவராகவும் செல்.ராசாமணி பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.