தீபாவளி மறுநாளான நவம்பர் 13-ஆம் தேதி பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையானது வருகின்ற நவம்பர் 12-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ளது.
தீபாவளிப் பண்டிகையையொட்டி சென்னை, கோவை, திருப்பூர் போன்ற நகரப் பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்.
நிகழ்வாண்டு ஞாயிற்றுக்கிழமை தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதால் திங்கள்கிழமை வழக்கம்போல் பள்ளி, அலுவலகங்கள் செயல்படும் சூழல் உள்ளது.
இதன் காரணமாக பண்டிகை நாளன்று இரவே சொந்த ஊர்களில் இருந்து புறப்பட வேண்டி உள்ளது.
இந்த நிலையில், மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் குடும்பத்துடன் கூடுதலாக ஒரு நாள் செலவிடுவதற்காக திங்கள்கிழமை பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று முதல்வருக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
மேலும், இதே கோரிக்கையை பெற்றோர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் எழுப்பியுள்ள நிலையில், திங்களன்று விடுமுறை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.