பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள் டிசம்பர் 16ஆம் தேதிக்குப் பின் தமிழ்நாட்டில் இயங்க அனுமதி இல்லை என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
அனைத்து பிற மாநில ஆம்னி பேருந்துகளும் டிசம்பர் 16க்குள் தமிழ்நாட்டில் மறுபதிவு செய்து முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
விழாக் காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான புகார்கள் வந்த நிலையில், கடந்த சரஸ்வதி பூஜை விடுமுறை நாட்களில், சிறப்புக் குழுக்கள் மூலம் பேருந்துகளில் சோதனைகள் நடத்தப்பட்டன.
இதில், 17,825 ஆம்னி பேருந்துகளை சோதனையிடப்பட்டதில், 2,502 ஆம்னிப் பேருந்துகளில் விதிமீறல்கள் கண்டுப்பிடிக்கப்பட்டது. 125 ஆம்னிப் பேருந்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. முடக்கம் செய்யப்பட்ட பேருந்துகளில் 85-க்கும் மேற்பட்டவை பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள் டிசம்பர் 16ஆம் தேதிக்கு பிறகு தமிழ்நாட்டில் இயங்க அனுமதி இல்லை என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.