மன்னார்குடி அருகே சாலையோர மரத்தின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவர் வியாழக்கிழமை பலியானார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த நெடுவாக்கோட்டை கீழத் தெருவைச் சேர்ந்த பால் சேகர் மகன் ரிஷால் (19). இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பிபிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
ரிஷால் வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் மன்னார்குடி - கும்பகோணம் பிரதான சாலை ரொக்ககுத்தகை என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்த போது நிலை தடுமாறி சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரிஷால் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதையும் படிக்க | மன்னார்குடி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயத் தொழிலாளி பலி
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி ஊரக காவல் நிலைய போலீசார், ரிஷாலின் உடலை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து புகாரின் பேரில் மன்னார்குடி ஊரக காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து மேல்விசாரணை செய்து வருகின்றனர்.