வாணியம்பாடி அருகே செட்டியப்பனூரில் அரசு விரைவுப் பேருந்தும், தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
பெங்களூருலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசு சொகுசு விரைவு பேருந்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் கூட்டு சாலை தரைப்பாலம் மீது வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற தனியார் ஆம்னி சொகுசு பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், இரண்டு பேருந்தின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில் பேருந்தில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கோர விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பட் ஜான் தலைமையிலான காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் பேருந்து விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த 64 பேரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மேலும் 3 பேர் பலியாகினர்.
இதையும் படிக்க | 800 கோடியைக் கடந்த உலக மக்கள்தொகை
இந்த விபத்தில் உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் ஏழுமலை, கர்நாடகா மாநிலம் கோளாறு பகுதியை சேர்ந்த தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுநர் நதீம், வாணியம்பாடி புதூர் பகுதியை சேர்ந்த முகமது பைரோஸ், ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த அஜித், சென்னை பகுதியை சேர்ந்த கிருத்திகா (35) என ஒரு பெண் மற்றும் இரண்டு பேருந்து ஓட்டுநர்கள் உட்பட ஐந்து பேர் பலியாகினர்.
மேலும், விபத்து குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று ஆறுதல் கூறி அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தி வந்தனர்.
விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த 27 பேரை மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து வாணியம்பாடி கிராமிய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
செட்டியப்பனூர் கூட்டுச்சாலையில் குறுகலான தரைப்பாலம் இருப்பதால் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க காவல்துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் தடுப்பு வேலிகள் அமைத்து போக்குவரத்தினது சரி செய்ய வேண்டும் என்பது பொதுமக்களும், சமூக அலுவலர்களும் கோரிக்கையாக உள்ளது.