சுதந்திரப் போராட்டத் தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா(102) உடல்நலக்குறைவு காரணமாக இன்று(நவ. 15) காலமானார்.
அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பலரும் நேரில் சென்றும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சங்கரய்யாவின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. பின்னர் மதியம் 3 மணிக்கு தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட உள்ளது. நாளை (நவ. 16) இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் உருக்கமாக தன் இரங்லைப் பதிவு செய்துள்ளார்.
அதில், “மாபெரும் தோழர் மறைந்தார். நூறாண்டு தாண்டிய தன் வாழ்வில், நினைவு தெரிந்த பருவம் முதல் ஒரு நாளையும், ஒரு நொடியையும் தனக்கென வாழாத் தகைமையைக் கைக்கொண்ட முதுபெரும் தோழர் என்.சங்கரய்யா நம்மை நீங்கினார்.
சுதந்திர வேட்கையிலும் அதன் பிறகு பொதுவுடைமைக் கொள்கையிலும் ஆழ்ந்திருந்த தோழர், ஒவ்வொரு நாளையும் எளிய மக்களின் நலனுக்காகவே செலவிட்டார். அவரைப் பிரிந்ததில் வருந்துவது இடதுசாரி இயக்கங்கள் மாத்திரமல்ல, நாகரிக அரசியல் விரும்பும் அத்தனை இயக்கங்களும்தான்.
இதையும் படிக்க: பொதுவுடைமை பூந்தோட்டம் என்.சங்கரய்யா 102
பெரும்பான்மையாய் வாழும் பாட்டாளி வர்க்கத்தினரின் துயர நாள் இது. அவர் ஏந்திய பதாகையை நாமும் நம் நெஞ்சில் ஏந்த வேண்டும். மறைந்த தோழருக்கு என் மனம் கலங்கிய அஞ்சலி.” எனக் குறிப்பிட்டுள்ளார்.