சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது ஆளுநரின் கடமை என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று (நவ. 18) காலை 10 மணியளவில் தொடங்கியது. முதலில் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின்,
மக்கள் நலனே முக்கியம்
உடல் நலனை விட மக்கள் நலனே முக்கியமானது. ஜனநாயகத்தை ஆளுநர் ஆர்.என். ரவி அவமதிக்கிறார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. சட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பி தமிழக மக்களையும் தமிழக சட்டப்பேரவையையும் ஆளுநர் அவமதிக்கிறார்.
ஆளுநர் பதவி அகற்றப்பட வேண்டியது
ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் ஆளுநர் மூலமாக பிரச்னைகளை உருவாக்கி வருகிறார்கள். ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி. அகற்றப்பட வேண்டிய பதவியாக இருந்தாலும், அது இருக்கும் வரை மக்களாட்சிக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநர் கடமை. ஆளுநர் என்ற உயர்ந்த பதவியின் மூலம் அரசியல் செய்ய நினைக்கின்றனர்.
சில இடையூறுகளால் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் மீண்டும் நடைபெறுகிறது. ஆளுநர் சரியாக தனது வேலையை செய்யாததால், இன்று சிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது. நிதி நெருக்கடி, மத்திய அரசின் நெருக்கடி இல்லையென்றால் தமிழ்நாடு அரசு இன்னும் சிறப்பாக செயல்படும்.
ஆளுநர் என்ன செய்ய வேண்டும்?
மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் பாலமாக இருந்து ஆளுநர் செயல்பட வேண்டும். ஆனால், ஆளுநர் ஆர்.என். ரவி, அரசுக்கு முட்டுக்கட்டை போடுகிறார் . சட்டப்பேரவை செயலைத் தடுக்கும் சக்தி ஒன்று முளைத்தால், அது ஜனநாயகத்தை அழிக்கும்.
இந்தியாவிலுள்ள மாநிலங்களில் தலையாய மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. தமிழ்நாடு வளர்ந்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் முட்டுக்கட்டையிடுகிறார் ஆளுநர். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலுள்ள நிலையில் அவசர அவசரமாக மசோதாக்களை திருப்பி அனுப்பியுள்ளார். தனிப்பட்ட விருப்பு வெறுப்பால் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழ்நாடு மக்களையும் தமிழ்நாடு சட்டப்பேரவையையும் ஆளுநர் அவமதிக்கிறார் என முதல்வர் தனது உரையில் குறிப்பிட்டார்.