நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூர் கிராமத்தில் மாநில அளவிலான சதுரங்க போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது.
சித்தர்வேடம் பூண்டு சிவபெருமான் திருநெல்வேலி மன்னன் வசுசேனன் மகள் ராஜாராஜேஸ்வரியுடன் சதுரங்கம் விளையாடி வெற்றி பெற்று ராஜாராஜேஸ்வரியை திருமணம் செய்து கொண்ட வரலாறு உடையது பூவனூர் தலம்.
பூவனூர் சதுரங்க கழகம் சார்பில் எம்.கே.ராமநாதன் நினைவாக நடத்தப்படும் இப்போட்டியில், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, அரியலூர், சேலம், திருச்சி உள்ளிட்ட 20 மாவட்டங்களைச் சேர்ந்த சிறுவர்கள், சிறுமியர்கள் 350 பேர் கலந்து கொண்டு விளையாடுகின்றனர்.
போட்டிகளின் துவக்கவிழாவிற்கு பூவனூர் சதுரங்க கழக தலைவர் ஆர்.தர்மராஜன் தலைமை வகித்தார். சதுரங்க கழக மாநில துணைத்தலைவர் ஆர்.கே.பாலகுணசேகரன், ஊராட்சிமன்றத் தலைவர் மோகன், திமுக கிளைச்செயலாளர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவாரூர் மாவட்ட சதுரங்க கழக செயலாளர் என்.சரவணன், மாவட்ட துணைத் தலைவர் ஆசிரியர் ஆர்.பாலன், சர்வதேச நடுவர் சக்திபிரபாகர் உள்ளிட்டோர் வாழ்த்திப்பேசினர்.
வெற்றி பெறுபவர்களுக்கு ஒவ்வொரு பிரிவினருக்கும் 15 பரிசுகள் வீதம் 120 பரிசு கோப்பைகள் வழங்கப்படுகிறது. எட்டு பிரிவுகளாக இப்போட்டி நடைபெறுகிறது.