தெற்கு ரயில்வேயின் புதிய அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை (அக்.1) முதல் அமல்படுத்தப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தெற்கு ரயில்வேக்குள் இயக்கப்படும் விரைவு, அதிவிரைவு ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை (அக்.1) முதல் மாற்றப்படவுள்ளன. அதன்படி விரைவு/மெயில் ரயில்களில் நேர மாற்றம், வேகம், சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
தற்போது வெளியிடப்பட்டுள்ள அட்டவணையில் சென்னை - கோவை, சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் உள்பட 11 விரைவு ரயில்கள் புதிதாக இடம்பெற்றுள்ளன.
திருச்செந்தூா் விரைவு ரயில், தேஜஸ் விரைவு ரயில் உள்ளிட்ட 199 ரயில்கள் கூடுதல் நிறுத்தங்களில் தற்காலிகமாக நின்று செல்கின்றன.
ரயில்களின் வேகம் அதிகரிப்பு: தெற்கு ரயில்வேக்குள்பட்ட 34 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், தொலைதூர ரயில்களான தாதா் - திருநெல்வேலி விரைவு, புணே - கன்னியாகுமரி விரைவு ரயில் 40 நிமிஷங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொல்லம் - சென்னை விரைவு ரயில் 40 நிமிஷங்களும், புனலூா் - மதுரை விரைவு ரயில் ஒரு மணி நேரமும் முன்னதாக சென்றடையும் என்று தெரிவிக்கப்படுள்ளது.