தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சிக்கு இதுவே சான்று: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னையில், பிரான்ஸ் நாட்டின் செயிண்ட் கோபைன் நிறுவனம் தமிழ்நாட்டில் மேலும் பல முதலீடுகளை மேற்கொள்ள உள்ளது. தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடைபெறுவதற்கு இதுவே சான்று என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த
தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சிக்கு இதுவே சான்று: முதல்வர் ஸ்டாலின் பேச்சு


சென்னை: சென்னையில், பிரான்ஸ் நாட்டின் செயிண்ட் கோபைன் நிறுவனம் தமிழ்நாட்டில் மேலும் பல முதலீடுகளை மேற்கொள்ள உள்ளது. தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடைபெறுவதற்கு இதுவே சான்று என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

சென்னையில், பிரான்ஸ் நாட்டின் செயிண்ட் கோபைன் நிறுவனத்தின் உலகளாவிய நிர்வாக இயக்குநர்கள் குழுவினரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (அக்.6) சந்தித்து பேசினார். 

அப்போது, தமிழ்நாட்டிற்கும் செயிண்ட் கோபைன் நிறுவனத்திற்குமான உறவு ஏறத்தாழ 25 ஆண்டு வரலாறு கொண்டது. 

1998-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், ஸ்ரீபெரும்புதூரில் இந்த நிறுவனத்திற்கான அடிக்கல் நாட்டி வைத்தவர் கருணாநிதி.

தமிழ்நாட்டில், ஸ்ரீபெரும்புதூர், பெருந்துறை மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களில், செயிண்ட் கோபைன் நிறுவனம் பல்வேறு தொழில் திட்டங்களை நிறுவி, இதுகாறும் ஏறத்தாழ ரூ.5000 கோடி முதலீடு மற்றும் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் அளித்துள்ளது. தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தையும் சென்னையில் அமைத்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் 9 ஆம் தேதி, ஸ்ரீபெரும்புதூர் செயிண்ட் கோபைன் நிறுவனத்தில் மிதவைக் கண்ணாடிப் பிரிவு, ஒருங்கிணைந்த ஜன்னல் பிரிவு, நகர்ப்புற வனம் ஆகியவற்றைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டேன் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தற்போது செயிண்ட் கோபைன் நிறுவனம், ஒரகடத்தில் ஒரு புதிய உற்பத்தித் திட்டமும், ஸ்ரீபெரும்புதூர், பெருந்துறை மற்றும் திருவள்ளூரில் நிறுவனத்தின் திட்டங்களில் விரிவாக்கமும் மேற்கொள்ள உள்ளது. இந்த மாநிலத்தில் நல்லாட்சி மற்றும் சிறப்பான முதலீட்டுச் சூழல் அமைந்திருப்பதற்கான அத்தாட்சியாகவே நான் கருதுகிறேன்.

சுமார் ரூ.3400 கோடி முதலீடு மற்றும் 1,150 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்று மேற்கொள்ளப்படும் இத்திட்டத்திற்கான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன். 

உங்களது தொழில் முயற்சிகள் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் அனைவரையும் சென்னையில் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். 

இந்த கூட்டத்தில், செயிண்ட் கோபைன் நிறுவனத்தின் தலைவர் பியரி ஆன்ட்ரி டி சேலண்டர், தலைமை செயல் அலுவலர் பெனாய்ட் பாசின் உள்ளிட்ட செயிண்ட் கோபைன் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி. அருண்ராய், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் வே.விஷ்ணு ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com