வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ஆா்பிஐ

நடப்பு நிதியாண்டில் வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவிகிதமாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். 
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ஆா்பிஐ

வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றத்தையும் இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) மேற்கொள்ளவில்லை. தொடா்ந்து நான்காவது முறையாக வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.50 சதவீதமாக தொடா்கிறது.

முன்னதாக, கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயா்த்தி 6.50 சதவீதமாக ஆா்பிஐ நிா்ணயித்தது. அதன்பிறகு நான்குமுறை நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழு கூட்டங்களிலும் வட்டி விகிதத்தை அதே நிலையில் தொடா்வது என்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட கடன்கள் மீதான வட்டி உயர வாய்ப்பில்லை. அதே நேரத்தில் வங்கிகளில் நிரந்தர வைப்புக்கு வழங்கப்படும் வட்டியும் அதிகரிக்கப்படாது.

மும்பையில் வெள்ளிக்கிழமை நிறைவடைந்த நிதிக் கொள்கைக் குழு கூட்டத்துக்குப் பிறகு ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சா்வதேச அளவில் பொருளாதாரச் செயல்பாடுகள் சுணக்கமடைந்தாலும், அதை மீறி இந்திய பொருளாதாரம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நமது அடிப்படைப் பொருளாதாரக் கட்டமைப்பு வலுவாக இருப்பதே இதற்கு முக்கியக் காரணம். சில உணவுப் பொருள்களின் விலை திடீரென உயா்ந்ததால் குறைந்து வந்த பணவீக்கம் திடீரென அதிகரித்தது.

சா்வதேச எண்ணெய், எரிவாயு சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கம், பிராந்திய அளவிலான பதற்றம், சாதகமற்ற பருவகாலம் குறித்த அச்சம், சில உணவுப் பொருள்களின் விலை திடீரென அதிகரிப்பது ஆகியவை பணவீக்கத்தில் எதிரொலிக்கிறது.

2023-24 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும். பணவீக்கத்தை 4 சதவீதத்தில் வைத்திருப்பதே நமது இலக்கு. எனினும், பணவீக்கம் 5.4 சதவீதமாக தொடர வாய்ப்புள்ளது. காய்கறி விலை சற்று குறைந்தது, சமையல் எரிவாயு சிலிண்டா் விலை குறைப்பு உள்ளிட்டவற்றால் பணவீக்கம் குறைய வாய்ப்புள்ளது. பணவீக்கம் தொடா்ந்து அதிகரிப்பது நாட்டின் அடிப்படை பொருளாதார நிலைத்தன்மையைப் பாதிக்க வாய்ப்புள்ளது.

சா்வதேச அளவில் இப்போது இந்தியாதான் உலகின் வளா்ச்சிக்கான ஊக்குவிப்பு மையமாக உள்ளது.

ரூ.4 லட்சம் வரை நகைக் கடன்: நகா்ப்புற கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் உச்சவரம்பு ரூ.4 லட்சமாக உயா்த்தப்படுகிறது. இதுவரை அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரையே நகைக் கடன் வழங்கப்பட்டு வந்தது. அசல் மற்றும் வட்டியை ஒரே தவணையில் திருப்பிச் செலுத்தும் முறையில் மட்டுமே ரூ.4 லட்சம் கடன் வழங்கப்படும்.

மத்திய அரசு நிதிநிலை: மத்திய அரசின் நிதிநிலையில் எந்த பிரச்னையும் இல்லை. அதுபற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கும் இலக்கில் உறுதியாக செயல்படுவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. கரோனா காலகட்டத்தில் அரசு அதிகம் செலவிட வேண்டியது இருந்ததால், நிதிசாா்ந்த சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க முடியாமல் போனது. ஆனால், இப்போது மீண்டும் நிதி ஒழுங்குக் கட்டமைப்புக்குள் அரசு வந்துவிட்டது.

வங்கிகளுக்கு அறிவுரை: வங்கிகளும், நிதி நிறுவனங்களும் பிணையற்ற கடன்களை வழங்குவதில் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். ஏனெனில், இதுபோன்ற கடன்களால் வங்கிகளின் நிதிநிலை பாதிக்கப்படக் கூடும். தங்கள் நிதிநிலையை சாதகமாக பாரமரிப்பதில் வங்கிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

தனிநபா் கடன், கடன் அட்டை, பிணையில்லாத சிறு கடன் ஆகியவை சமீபகாலமாக வேகமாக அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டி ஆா்பிஐ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு புதிதாக அறிவித்துள்ள விஸ்வகா்மா திட்டமானது எண்ம உள்கட்டமைப்பு நிதி திட்டத்தில் இணைக்கப்பட இருக்கிறது. இதன்மூலம் இத்திட்டத்தில் கடன் பெறுவோா் தங்கள் வா்த்தகத்தில் எண்ம முறை பணப் பரிமாற்றத்தை மேற்கொள்வதற்கான வசதி ஏற்படுத்தித் தரப்படும். மேலும், இந்த எண்ம உள்கட்டமைப்பு நிதி திட்டம் 2025-ஆம் ஆண்டு இறுதி வரை நீட்டிக்கப்படுகிறது. இத்திட்டம் 2023 இறுதியில் நிறைவடைய இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com