தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 1,666 பேருந்துகளை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தை, ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் பெற்றுள்ளது.
இது குறித்து, சென்னையில் தலைமையகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 1,666 புதிய பேருந்துகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
பிஎஸ்-6 தர நிா்ணயங்களை நிறைவு செய்யக்கூடிய பேருந்துகளுக்காக மாநில அரசிடமிருந்து கிடைத்துள்ள மிகப் பெரிய கொள்முதல் ஒப்பந்தம் இதுவாகும்.
தமிழ்நாடு அரசுக் போக்குவரத்துக் கழகம் அசோக் லேலண்ட் நிறுவன பேருந்துகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. அந்த அமைப்பில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அசோக் லேலண்ட் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இது, அந்தப் போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் 90 சதவீதமாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.