திருச்சி: மகாளய அமாவாசையை முன்னிட்டு திருச்சியில் சனிக்கிழமை புண்ணிய தலங்கள் மற்றும் ஆறு, குளங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
புரட்டாசி மாதம் பிரதமை முதல் அமாவாசை வரையிலான 15 நாட்கள் மகாளய பட்சம் எனப்படுகிறது. இந்த நாட்களில் நம் முன்னோர்கள் பூமிக்கு வந்து நம் பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்வதாக ஐதீகம். மகாளய பட்சத்தில் வரும் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வது விசேஷம்.
இந்த நிலையில், சனிக்கிழமை மகாளய அமாவாசை என்பதால் புண்ணிய தீர்த்தங்களில் மக்கள் புனித நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர்.
இதையும் படிக்க தமிழகத்தில் 365 மருத்துவ இடங்கள் வீணாகும் நிலை!
திருச்சியில் ஸ்ரீரங்கம் காவிரியாற்றின் அம்மா மண்டபம் படித்துறையில் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுக்க திரண்டுள்ளனர்.
காவிரியாற்றில் தண்ணீர் செல்வதால் பக்தர்கள் பாதுகாப்பாக நீராடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் காவிரியாற்றில் ரப்பர் படகில் ரோந்து வந்தவாறு மீட்புப் பணியில் தயார் நிலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோல், காவிரி, கொள்ளிடம் கரைகளில் அனைத்துப் படித்துறைகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது.