சிவகங்கை: சிவகங்கை அடுத்துள்ள இலுப்பைகுடியில் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில் ஒரே ரோல் எண்ணில் 2 பேர் வந்ததால் குழப்பம் ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம், திருமாஞ்சோலை அருகே இலுப்பைகுடியில் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி மையம் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
இந்த பயிற்சி மையத்திற்கு 2022 ஆம் ஆண்டு மத்திய பணியாளர் தேர்வாணையம்(எஸ்எஸ்சி) வெளியிட்ட தேர்வின் முடிவின்படி, அஜய் குமார்(6202001497) ரோல் எண்ணில் பயிற்சிக்கு தேர்வானார். ஆனால் அவர் பயிற்சியில் சேரவில்லை.
இந்த நிலையில், அவருக்கு பதிலாக உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த அஜய் சிங் செப். 30 ஆம் தேதி பயிற்சி மையத்தில் சேர்ந்துள்ளார். அதே பயிற்சி மையத்தில் அக்டோர் 9 ஆம் தேதி அதே ரோல் எண்ணில் சந்தீப் யாதவ் என்பவரும் பயிற்சி மையத்தில் சேர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், 2 பேரும் ஆள் மாறாட்டம் செய்து பணியில் சேர்ந்துள்ளது சான்றிதழ்கள் சரிபார்ப்பின் போது தெரியவந்தது.
இதையடுத்து இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படையின் கமாண்டர் ரன்வீர் ராணா சிவகங்கை பூவந்தி போலீசில் புகார் அளித்துள்ளார்.
எஸ்எஸ்சி மூலம் நடைபெறும் தேர்வில் எப்படி முறைகேடு நடைபெற்றது என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.