தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத் துறை நேற்று(அக். 18) ஒரேநாளில் ரூ. 180 கோடி வருவாயை ஈட்டி சாதனை படைத்துள்ளது.
வணிகவரி மற்றும் பதிவுத் துறை அரசுச் செயலாளர் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் சுபமுகூர்த்த தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப் பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் 18.10.2023 (புதன்கிழமை) அன்று ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் வழங்கப்பட்டன. அதன் விளைவாக நேற்று மட்டும் ஒரேநாளில் ரூ.180 கோடி வருவாய் ஈட்டி பதிவுத் துறை சாதனை படைத்துள்ளது.
இதையும் படிக்க | அக். 20, 21 தேதிகளில் கூடுதல் மெட்ரோ ரயில் சேவை!
சுபமுகூர்த்த தினமாகக் கருதப்படும் ஐப்பசி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான நாளையும் (20.10.2023) அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என எதிர்பார்க்கப்படுவதால் 20.10.2023 அன்று கூடுதலாக முன்பதிவு வில்லைகள் வழங்கப்பட வேண்டும் என பதிவுத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக நான்கு தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.