சென்னை: இஸ்ரேல் காஸா போரினை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
காஸா முனைப் பகுதியில் இருந்து செயல்படும் ஹமாஸ் ஆயுதப் படையினா் கடந்த 7-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து நடத்திய திடீா் தாக்குதலில் 1,400 இஸ்ரேலியா்கள் கொல்லப்பட்டனா்.
இதற்கு பதிலடியாக போரை அறிவித்த இஸ்ரேல், தொடா் வான்தாக்குதலை நடத்தி வருகிறது. வடக்கு காஸாவில் உள்ள மக்கள் பாதுகாப்பை கருதினால், தெற்கு காஸாவுக்கு செல்ல வேண்டும் என எச்சரித்தது.
செவ்வாய்க்கிழமை இரவு, காஸாவில் உள்ள அல்-அஹில் அரபு மருத்துவமனை மீது குண்டு வீசப்பட்டு 500 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டனா்.
இது உலகம் முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது.
இஸ்ரேல் - பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கு இடையே கடந்த 13 நாள்களாக போா் நடைபெற்று வரும் நிலையில், பாலஸ்தீன அதிபா் முகமது அப்பாஸுடன் வியாழக்கிழமை தொலைபேசியில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி, தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன மக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த மோடி, இஸ்ரேஸ் -பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நீண்ட கால கொள்கை தொடரும் என்றும் மனிதாபிமான நிவாரண உதவிகள் தொடா்ந்து வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தாா்.
இந்த நிலையில், இஸ்ரேல் காஸா போரினை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | தமிழக அரசில் சமூக இயல் வல்லுநர் பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா?
இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது:
இஸ்ரேல்-காசா பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரினை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், உலக நாட்டுத் தலைவர்களுடன் தனக்குள்ள செல்வாக்கினைப் பயன்படுத்தி பேச்சு வார்த்தைக்கு வழிவகுக்கவும், அமைதியை நிலைநாட்டவும், அங்குள்ள மக்கள் நிம்மதியாக வாழவும், உலகப் பொருளாதாரம் மேம்படவும் பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.