கெளதமியின் சொத்துக்கள் பறிபோவதைப் பாதுகாத்து இருக்க வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகுவதாக நடிகை கெளதமி திங்கள்கிழமை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி கிரீடா பாரதி அமைப்பு சார்பில் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் வகையில் விருதுகள் வழங்கும் விழா புதுச்சேரி ஆச்சார்யா சிக்ஷா மந்திர் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியலில் வரும் பெண்களை ஊக்கப்படுத்த வேண்டும், அரசியலில் கிடைத்த வாய்ப்பை இழக்கும் அளவிற்கு சூழ்நிலை இருந்திருக்கக்கூடாது என்று தெரிவித்தார்.
பாஜகவிலிருந்து நடிகை கெளதமி விலகியது குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “கெளதமி அரசியலில் பணியாற்ற வேண்டிய வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் கெளதமி எந்தவித பகட்டும் இல்லாமல் கட்சியில் நன்றாக பணியாற்றக்கூடியவர், அவரது பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஏன் தீர்க்கப்படவில்லை என தெரியவில்லை எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஆளுநர் தமிழிசை, “என்னிடம் வந்திருந்தால் நேரிடையாக உதவி செய்ய முடியவில்லை என்றாலும் மறைமுகமாக உதவி செய்து இருப்பேன்” என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.
விழாவில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சமூக நலத்துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் மற்றும் கிரீடா பாரதி அமைப்பு புதுச்சேரி தலைவர் வழக்கறிஞர் கார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள், பள்ளி மாணவ மாணவிகள் என திரளாக கலந்து கொண்டனர்.