திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புதன்கிழமை காலை (செப். 13) ஆவணித்திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர்.
திருச்செந்தூரில் பிரசித்திப் பெற்ற ஆவணித்திருவிழா கடந்த செப். 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலை, மாலை இரு வேளைகளிலும் சுவாமி அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பத்தாம் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் புதன்கிழமை காலை நடைபெற்றது. காலை 6.15 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. பிள்ளையார் ரதம், சுவாமி தேர், அம்மன் தேர்கள் திரு வீதி வலம் வந்து நிலை சேர்ந்தது.
வள்ளி, தேவசேனா அம்மனுடன் தேரில் எழுந்தருளிய சுவாமி குமரவிடங்கப்பெருமான்.
இத்தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம்பிடித்து தேர் இழுத்தனர். பக்தர்கள் வசதிக்காக பல்வேறு வழித்தடங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. பாதுகாப்புப் பணியில் காவல் துணைக் கண்காணிப்பாளர் மு.வசந்த்ராஜ் தலைமையில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க | அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா வீட்டில் சோதனை!
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் இரா.அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், பா.கணேசன், ந.ராமதாஸ், வி.செந்தில்முருகன், இணை ஆணையர் மு.கார்த்திக் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
நாளை புஷ்ப சப்பர உலா: 11ஆம் திருநாளான வியாழக்கிழமை (செப்.14) மாலையில் சுவாமியும், அம்மனும் யாதவா் மண்டகப்படியில் அபிஷேக, அலங்காரமாகி புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி இரவு தெப்பக்குளம் மண்டபத்திற்கு வந்து சோ்கின்றனா். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி திருவீதி வலம் வந்து மேலக்கோயில் சோ்கின்றனா்.