கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் வியாழக்கிழமை இரவு பலத்தமழை பெய்ததால் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் உள்ளிட்ட பள்ளத்தாக்கு பகுதியில் முதல்போக சாகுபடி நன்செய் விவசாயம் செய்யப்பட்டு நெல் அறுவடை நாள் நெருங்கி வருகிறது.
இந்த நிலையில் நீர்வரத்து தரும் முல்லைப் பெரியாறு அணையில் கடந்த சில நாள்களாக போதுமான மழை பெய்யவில்லை. இதனால் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா என்று விவசாயிகள் கவலையடைந்தனர்.
இதையும் படிக்க | கேரளாவில் பரவலாக மழை: 10 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை
இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளான பெரியாறு அணையில் 25.4 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 26.2 மி.மீ., மழையும் பெய்தது. இதனால் அணைக்கு நீர் வரத்து வெள்ளிக்கிழமை அதிகரிக்கும் என்பதால் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து அணைப்பகுதி பொறியாளர்கள் கூறுகையில், தொடர்மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று தெரிவித்தனர்.
அணை நிலவரம்
அணையின் நீர்மட்டம் 119.45 அடி (மொத்த உயரம் 152 அடி), அணையில் நீர் இருப்பு 2,529 மில்லியன் கன அடி, நீர் வரத்து வினாடிக்கு 509.17 கன அடி, தமிழக பகுதிக்கு வினாடிக்கு 400 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.