குன்னூர் மரப்பாலம் அருகே 50 அடி பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் பலியானார்கள்.
உதகைக்கு சுற்றுலா சென்றுவிட்டு தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பேருந்து ஒன்றில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். இவர்கள் சென்ற பேருந்து குன்னூர் மரப்பாலம் அருகே 50 அடி பள்ளத்தில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவல் கிடைத்ததும் நிகழ்விடத்துக்கு காவல்துறையினர் உள்ளிட்ட மீட்புக்குழுவினர் விரைந்தனர். இருப்பினும் இந்த விபத்தில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர் பலியானார்கள். காயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து குன்னூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட தகவவின்படி குறுகிய வளைவில் பேருந்து திரும்பிய போது நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே குன்னூர் அருகே சுற்றுலாப் பேருந்து விபத்தில் பலியானோரின் குடும்பத்திதல் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் விபத்தில் படுகாயமடைந்தோருக்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் அறிவித்துள்ளார்.