குமாரபாளையம்: குமாரபாளையத்தில் 700 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (ஏ.16) காலை தொடங்கியது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை அடுத்த வளையக்காரனூர், எஸ்.எஸ்.எம்.பொறியியல் கல்லூரி பின்புறம் உள்ள திடலில் நடைபெறும் இந்த போட்டிகளை தமிழக வனத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். முன்னதாக, ஜல்லிக்கட்டு போட்டிக்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, வாடிவாசல் வழியாக காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப் பாய்ந்து வந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் லாவகமாகப் பிடித்தனர்.
வீரர்களிடம் சிக்காத காளைகள் வீரர்களை முட்டி தூக்கி வீசின. காளைகளை அடக்கி வெற்றி கண்ட வீரர்களுக்கும், வீரர்களிடம் சிக்காமல் வெற்றி பெற்ற காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
காயமடையும் வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. காளைகள் கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன. குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் வினோத்குமார், செயலாளர் ராஜ்குமார் பாலசுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.