
நடிகர் விமல் (கோப்புப் படம்)
காசோலை மோசடி வழக்கில் இழுத்தடிக்கும் நோக்கத்தில் செயல்படுவதாக நடிகர் விமலுக்கு ரூ. 300 அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மன்னர் வகையறா திரைப்படத்தைத் தயாரிக்க நடிகர் விமல், கோபி என்பவரிடமிருந்து ரூ.4.5 கோடி கடனாக பெற்றுள்ளார்.
படம் வெளியான பின்னரும் அந்தத் தொகையை அவர் வழங்கவில்லை. பின்னர், அந்த தொகையை விமல் காசோலையாக வழங்கியுள்ளார். ஆனால் அந்த காசோலை வங்கியில் செலுத்தும்போது திரும்பி வந்தது. இதனைத் தொடர்ந்து விமல் மீது காசோலை மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் விசாரணைக்கு விமல் தரப்பிலிருந்து ஒத்துழைப்பு வழங்கவில்லை என கூறப்படுகிறது. எனினும் வழக்கு விசாரணையை நீதிபதி தாரணி தொடங்கினார்.
இதனிடையே முதல் சாட்சியை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று விமல் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்ட நடிகர் விமலுக்கு ரூ.300 அபராதம் விதிப்பதாக உத்தரவிட்டார். பின்னர் வழக்கை வரும் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.